(இது நான் முதன்முதலாக என்னோட Blogல பதிவிடும் விமர்சனம். தப்பு எதும் கண்ணுல பட்டா கண்டிப்பா சொல்லுங்க. அடுத்த தடவை சரிசெய்ய வசதியா இருக்கும்)
மாஞ்சா வேலு படத்தைத் தொடர்ந்து, இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு அருண் விஜய் நடித்து வெளிவந்துள்ள ஆக்சன் படம். இத வெறும் ஆக்சன் படம்னு சொல்றத விட ஆக்சன் த்ரில்லர்னு சொன்னா பொருத்தமா இருக்கும்.
ஏற்கனவே பல தடவை பார்த்த வழக்கமான மிடில் கிளாஸ் இளைஞன் - ரவுடி மோதல் கதைதான்னாலும், திரைக்கதை எதிர்பாராத திருப்பங்களோட போரதுனால படம் பாராட்டும் படியா இருக்கு. படத்தோட +point இது தான். ஆகா ஓகோன்னு ஓவரா புகழும் அளவுக்கு இல்லாட்டிலும், சுத்தமா லாஜிக் இல்லாத மரணமொக்கை ஆக்சன்களுக்கு இது எவ்வளவோ மேல்.
அருண் விஜய்க்கு இது ஒரு நல்ல re-entry. ரொமான்ஸ் காட்சிகளில் இயல்பு, சண்டைக் காட்சிகளில் நல்ல வேகம், இப்படி மொத்தத்துல அவருக்குத் தரப்பட்ட வேலைய சிறப்பா செஞ்சிருக்காரு. வில்லன்களா வர்ற மகாகாந்தியும் வம்சி கிருஷ்ணாவும் கச்சிதம். வில்லன் என்கிற ஒரே காரணத்துக்காக வம்சி அவரு முகத்த எப்பவுமே உர்ர்ர்ன்னு வச்சிருக்காம கொஞ்சம் இயல்பா இருக்க முயற்சி பண்ணிருக்கலாம். சின்ன சின்ன வேடத்துல வர்றவங்களும் அவங்க ரோலுக்கு தேவையானத சரியா செஞ்சிருக்காங்க.
அப்புறம், நாயகி மம்தா படத்துல இருக்கிறதும் இல்லாததும் ஒன்னு தான். ரொமான்ஸ், டூயட் பாட்டு இது ரெண்டும் படத்துல வரணும்கிரதுக்காகவே அவங்க கேரக்டர கொண்டு வந்த மாதிரி இருக்கு. மத்த படி கதைக்கும் அவங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்ல.
தமனோட பின்னனி இசை விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏத்த மாதிரி அதிரடியா இருக்கு. பாடல்களும் கேட்கும் ரகம். அங்கங்க பாட்டு வைக்காம, 2 பாட்டோட அதையும் முதல் பாதியிலயே முடிச்சிருக்கது நல்லது.
ஆக்சன் விரும்பிகளுக்கு நல்ல விருந்தாக அமைந்திருக்கும் இந்தப் படத்தில், தேவையற்ற காதல் காட்சிகள் மற்றும் வெகு சில லாஜிக் பிழைகளில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், தடையறத் தாக்க, ஒரு தடையற்ற தாக்குதலாக அமைந்திருக்கும். சுருக்கமாச் சொல்றதா இருந்தா, இது ஒரு நல்ல படம், ஆனா சிறந்த படமல்ல.
